வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.
ஜோ பைடன் பதவியேற்பு, பாராளுமன்ற கட்டிட வன்முறை, டொனால்டு டிரம்ப் பதவிநீக்கம் செய்யும் நடைமுறைகள் தொடர்பான அரசியல் ரீதியிலான விளம்பரங்களை இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை வெளியிட கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது.
ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.