புலஸ்தினி என அழைக்கப்படும் சாரா இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் இந்திய புலனாய்வுத்துறை மற்றும் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்ற நபர் இந்தியாவில் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் இன்று வரை அது உறுதிப்படுத்தப்படவில்லை.
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சாராவும் இருந்துள்ளார் என்றே புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.
எனவே அவர் அந்த தாக்குதலில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மரபணு பரிசோதனைகள் முனனெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறு இருப்பினும் அவர் இந்தியாவில் உள்ளாரா என தெரியவில்லை. இந்தியாவில் இருந்து மீண்டும் அவர் இலங்கைக்கு வந்துள்ளார் என்ற தகவலும் எமக்கு கிடைத்தது.
எனவே நாம் இந்திய புலனாய்வுத் துறையுடனும், சர்வதேச பொலிஸாருடனும் இணைந்து இந்த விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம்.
இராஜதந்திர ரீதியிலும் இது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் அவர் இந்தியாவில் உள்ளாரா என தெரியவில்லை.
அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரிந்தால் மட்டுமே அவரை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
எனவே அவர் உயிருடன் இருந்தால் அவரை நிச்சயமாக கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளார்.