
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 6) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. இன்றுடன் பிரச்சாரம் ஓய்வதால் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம் வருமாறு:-
- தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தர வேண்டும். இது தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற வழிவகுக்கும். இதனால், வாக்காளர்கள் அச்சமின்றி முழு சுதந்திரத்துடன் வாக்களிக்க முடியும்.
- அரசியல் கட்சியால் நியமிக்கப்படும் தேர்தல் பணியாளர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையினை அணிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அலுவல் சாரா அடையாள சீட்டில் (பூத் சிலிப்) கட்சியின் பெயர், சின்னம் மற்றும் வேட்பாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறுதல் கூடாது. தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் மதுபானம் பயன்படுத்துதல் கூடாது.
- வாக்குச்சாவடி மையத்திற்கு அருகில் அரசியல் கட்சிகளால் அமைக்கப்படுகிற வாக்காளர் உதவி முகாமில் தேவையற்ற வகையில் நெரிசல் உருவாகாத வகையில் செயல்பட வேண்டும். இதனால், கட்சியினர் இடையே தேவையற்ற பதற்றம் மற்றும் பிரச்சினை உருவாகாமல் தடுக்க முடியும்.
- வேட்பாளர் முகாம்கள் எளிமையாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். கட்சியின் கொடி, சின்னங்கள், போஸ்டர்கள் மற்றும் இதர விளம்பரங்களை காட்சிப்படுத்தக்கூடாது. மேலும் முகாம்களில் உணவு வினியோகம் கூடாது.
- வாக்குப்பதிவு நாளன்று வாகனம் பயன்படுத்துதல் தொடர்பான தேர்தல் அலுவலர்களால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாகன அனுமதி சீட்டினை வெளியில் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்திட வேண்டும், இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
newstm.in