மியான்மரில் ஜனநாயகம் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை நசுக்குவதற்காக ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 114 பேர் கொல்லப்பட்டனர்.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இதுதொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில் அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது. 300-க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டு குடிமக்களை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
இந்தநிலையில் நேற்று யாங்கூன் உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் ராணுவத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தினர். பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராடினர். சில இடங்ளில் தீ வைப்புச் சம்வங்களும் நடைபெற்றன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
போராட்டத்தை நசுக்குவதற்காக ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 114 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் சுட்டுகொல்லபட்ட 13 பேரில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனின் இன்சீன் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் 21 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர ஒருவர் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
ராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும் என்றும் ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறிய மறுநாளே ராணுவம் இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணுவ தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தற்போது மியான்மர் நாட்டில் ராணுவத்தின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கும் சிஆர்பிஹெச் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.