உண்மையாக காதலித்த ஜாக்குலினை விட்டுவிடுங்கள் : மோசடி மன்னன் வேண்டுகோள்

பல கோடி மோசடியில் ஈடுபட்டு தற்போது சிறையில் இருப்பவர் இடைத்தரகரும் மோசடி மன்னனுமான சுகேஷ் சந்திரசேகர். 21க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளது. இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியானது.

இதனால் மோசடி வழக்கை நடத்தி வரும் அமலாக்கத் துறையினர் ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் டில்லி திஹார் சிறையில் இருக்கும் சுகேஷ் தனது வழக்கறிஞர் மூலம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

எனது தனிப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருவது மிகுந்து வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நுழைவதாகும். நானும் ஜாக்குலினும் காதலித்தோம். நீங்கள் கேலி செய்வதைப் போல, விமர்சிப்பதைப் போல எங்கள் காதல் பணத்தின் அடிப்படையில் உருவானதல்ல. எங்களுக்கிடையில் இருந்த உறவு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது.

தயவுசெய்து ஜாக்குலினை தவறாகக் காட்ட வேண்டாம். அவர் எந்த எதிர்பார்ப்புமின்றி என்னை காதலித்தார். இந்த வழக்குக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் என்னை காதலித்ததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. அவரை விட்டு விடுங்கள்.
இவ்வாறு கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.