தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான பிப்.4-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் 28.01.2022 வரை பெறப்பட்டுள்ளன. அதில், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 14,701 வேட்புமனுக்கள், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 23,354 வேட்பு மனுக்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 36,361 வேட்பு மனுக்கள் என மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.