இந்திய அணி தனது ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற 177 ரன்கள் இலக்கு!

ஆமதாபாத்,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் 8 ரன்னிலும், பிராண்டன் கிங் 13 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் மற்றும் பேபியன் ஆலன் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஜேசன் ஹோல்டர்  அரைசதம் கடந்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற பேபியன் ஆலன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க, 43.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் சேர்த்தது. 
இப்போட்டியில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் யுஸ்வேந்திர சாஹல்.
இந்திய அணியில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும்,  பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும்,  முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.