துபாயில் இருந்து கேரளா திரும்பிய முதல்வர் பினராய்க்கு பாஜ கருப்புக்கொடி

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் சிகிச்சைக்காக 3 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவியும் சென்றார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த பின்னர் கடந்த மாத இறுதியில் அவர் கேரளா திரும்புவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், திடீரென அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து நேராக அவர் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இந்நிலையில், நேற்று மதியம் அவர் துபாயில் இருந்து கண்ணூர் வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது திடீரென வழியில் திரண்டிருந்த பாஜ இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா தொண்டர்கள் அவரது கார் முன் பாய்ந்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, கடத்தலுக்கு முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உதவி செய்தார் என்று கூறியிருந்தார். மேலும், அவரது தூண்டுதலினால் தான் தங்கக் கடத்தலில் முதல்வர் பினராய் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூற வேண்டும் என்று அமலாக்கத் துறையினர் கட்டாயப்படுத்துவதாக பொய் சொன்னேன் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தான் பாஜ இளைஞர் அமைப்பினர் முதல்வர் பினராய் விஜயனுக்கு கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். வரும் நாட்களில் முதல்வர் பினராய் விஜயனை கண்டித்து கேரளாவில் போராட்டம் வலுக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.