லதா மங்கேஷ்கர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும்: பாக். அமைச்சர் புகழஞ்சலி

இஸ்லாமாபாத்: தலைசிறந்த பாடகர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும் என்று பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.

லதா செப்டம்பர் 28, 1929 அன்று பாரம்பரிய பாடகரும் நாடகக் கலைஞருமான பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் மற்றும் ஷெவந்தி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மறைந்த பாடகர் லதா மங்கேஷ்கர் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28 இல் பிறந்தவர். அவரது தந்தை பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் ஒரு நாடகக் கலைஞராக புகழ்பெற்றவராக இருந்ததும்பாரம்பரிய பாடல்களை பாடிவந்ததும் லதாவுக்கு இயற்கையிலேயே பாடல்களில் தணியாத ஆர்வம் ஏற்பட்டது. தனது 13 வயதிலேயே அவர் தனது இசைப்பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

70 ஆண்டு இசைப்பயணம்: 1942 முதல் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இசை வாழ்க்கையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் தனது பாடல்களைப் பதிவு செய்தார். இந்திமட்டுமல்லாது, தமிழ் உள்ளிட்ட முப்பத்தாறுக்கும் மேற்பட்ட மற்ற இந்திய மொழிகளிலும் வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடி மெல்லிசைப் பாடல் துறையின் முடிசூடா ராணியாக திகழ்ந்தார். அனைவரையும் கட்டிப்போடும் அற்புதமான பாடல்களுக்காக “இந்தியாவின் நைட்டிங்கேல்” என்றே அவர் அழைக்கப்பட்டார். பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய துக்கம்: மறைந்த பாடகர் லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும்பொருட்டு இரண்டு நாள் தேசிய துக்கநாளாக அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்து. அதன்படி பாரத ரத்னா விருது பெற்ற உன்னத இசைக்கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். லதா மங்கேஷ்கருக்கு அரசு முறைப்படி அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் அமைச்சர் இரங்கல்: பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாத் ஹுசைன் இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”லதாமங்கேஷ்கர் ஓர் மெல்லிசை ராணி, பல தசாப்தங்களாக இசை உலகை ஆண்டவர், இசையின் முடிசூடா ராணி அவர், ஒரு தலைசிறந்த பாடகர் இப்போது இல்லை, என்றாலும் அவரது குரல் இனி வரும் எல்லா காலங்களிலும் மக்களின் இதயங்களில் அரசாட்சி செய்யும். லதா மங்கேஷ்கருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.