அசாதுதீன் ஓவைசி மீது தாக்குதல் – பார்லி.,யில் அமித் ஷா விளக்கம்!

அசாதுதீன் ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, கடந்த வியாழக்கிழமை அன்று, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு, டெல்லி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, சாஜர்சி சுங்கச்சாவடி அருகே, அவரது கார் மீது 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், அதிர்ஷ்டவசமாக அசாதுதீன் ஓவைசி காயமின்றி உயிர் தப்பினார். எனினும் அவரது வாகனம் சேதம் அடைந்தது.

இதனை தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முன்வந்த போது அதை ஏற்க மறுத்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அசாதுதீன் ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

அடையாளம் தெரியாத இரண்டு பேர் அசாதுதீன் ஓவைசி வந்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை மூன்று பேர் நேரில் பார்த்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

அசாதுதீன் ஓவைசிக்கு, ஹபூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்வு எதுவும் இல்லை. அவரது வருகை குறித்து மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் முன்பே அனுப்பப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு அங்கீகரிக்கப்படாத கைத் துப்பாக்கிகள் மற்றும் ஒரு ஆல்டோ கார் ஆகியவை மீட்கப்பட்டன. கார் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் குழுவினர் விசாரணை நடத்தி, ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக உத்தர பிரதேச மாநில அரசிடம் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக அறிக்கை வழங்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில், அசாதுதீன் ஓவைசிக்கு “இசட்” பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

அசாதுதீன் ஓவைசிக்கு அச்சுறுத்தல் காரணமாக, குண்டு துளைக்காத வாகனமும், இசட் பிரிவு பாதுகாப்பும் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதை ஏற்க மாட்டேன் என, அவரே தெரிவித்து உள்ளார். மத்திய அரசு அளித்துள்ள பாதுகாப்பை ஏற்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.