நீட் விலக்கு மசோதா | ஆளுநர் செய்தது அரசியல் சட்ட அமைப்புக்கே எதிரானது: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

சென்னை: “தமிழக சட்டப்பேரவை கூடி கொள்கை அடிப்படையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது அடிப்படை அரசியல் சட்ட அமைப்புக்கே எதிரானது என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியுள்ளது. சபாநாயகர் விவாதத்தைத் தொடங்கிவைக்க, நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அவர் ஆற்றிய உரை: “நீட் தேர்வை தமிழக மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால், மக்களின் உணர்வை மீறியும் 2017-க்குப் பின் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர், கடந்த 13.09.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வினை பிரதிபலிக்கும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். பின்னர் இருமுறை முதல்வர், ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார்.

ஆனால், 142 நாட்களுக்குப் பின்னர் ஒரு கடிதத்தை ஆளுநர் அனுப்பியுள்ளார். சட்ட மசோதாவை ஆளுநர் தன்னிச்சையாக அவர் திருப்பியனுப்பியது சரியான முடிவு அல்ல. தமிழக அரசின் சட்ட மசோதா, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட மசோதா என்று ஆளுநர் கூறியுள்ளார்.

ஆனால், ஆளுநர் கூறுவது போல் இது வெறும் அறிக்கையின் அடிப்படையிலானது அல்ல. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வு தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து விரிவாக ஆய்வு செய்து பொதுமக்கள் கருத்துகளைக் கேட்டு 7 பரிந்துரைகளை அளித்தது. அதில் உள்ள மூன்றாவது பரிந்துரையை ஆராய்ந்து, அதில் சட்ட வல்லுநர்களின் கருத்துகளை முறையாகக் கேட்டு மசோதாவை நிறைவேற்றியுள்ளோம்.

மேலும், ஆளுநர் குறிப்பிட்டுள்ளதுபோல் நீட் விலக்கு மசோதாவில் இடம்பெற்றுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு கருத்துகள் வெறும் ஊகங்கள் அல்ல. மேம்போக்காக கூறப்பட்டுள்ள ஆளுநரின் கருத்து தமிழக அரசு அமைத்த உயர்மட்டக் குழுவை அவமதிக்கிறது.

நீட் தேர்வு உண்மையில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே எளிதானதாக உள்ளது. மற்றபடி கிராமப்புற ஏழை, பட்டியலின மாணவர்களுக்கு இது எட்டாக்கனியாக உள்ளது. மேலும், புதிதாக 12-வது வகுப்பு தேர்வை முடித்து நீட் தேர்வை எழுதுபவர்கள் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று பன்முறை எழுத வசதியுள்ள மாணவர்களுக்கு சாதகமாக இந்த நீட் தேர்வு உள்ளது.

நீட் தேர்வால், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் 1%-க்கும் குறைவான மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது. இதனால்தான் நீட் தேர்வை எதிர்த்து அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது. நீட் தேர்வு தனிப் பயிற்சியை ஊக்குவிக்கிறது. 2 முதல் 3 ஆண்டுகள் பயிற்சி தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் உயர்மட்டக் குழுவின் அம்சங்களை குறைகளாக சுட்டிக்காட்டுவது அரசியல் அமைப்பின்படி சரியானது அல்ல .

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை ஒரு தலைப்பட்சமானது என்று ஆளுநர் கூறியுள்ளார். உண்மையில் அந்தக் குழு பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் தனது கடிதத்தில் வேலூர் சிஎம்சி கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பற்றி கூறியுள்ளார். அதனைச் சுட்டிக் காட்டி, நீட் தேர்வு சரியானது எனக் கூறுகிறார். தமிழக அரசால் கொள்கை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி திருப்பியனுப்பியுள்ளது சரியான நடவடிக்கை அல்ல. அரசியல் சட்டமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை கேள்விக்குறியாகும் செயல். எனவே, நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற இந்தச் சட்டப்பேரவை முடிவு செய்துள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.