2022 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்துக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. அனைத்து அணிகளும், ஒரு சில வீரர்களை குறி வைத்துள்ளனர். குறிப்பிட்ட தொகையில் அவர்கள் கிடைகத்தால், ஏலத்தில் எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் காயத்தால அவதிப்பட்ட தமிழக வீரர் நடராஜன், இந்த ஐபிஎல் மூலம் மீண்டும் பழைய ஃபார்முக்கு வர திட்டமிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சிஎஸ்கே கேப்டனின் பொறுமையே அவரது பெருமை! பாராட்டுகளை பெறும் ஜிம் வீடியோ
ஒரு வருடத்துக்கும் மேலாக மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அவர், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த அவர், கொரோனா வைரஸ் பாதிப்பால் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராக உள்ளார்.
அவருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை விலை ஒரு கோடி ரூபாய். எதிர்வரும் ஐபிஎல் ஏலம் குறித்து பேசிய அவர், “ஏலம் குறித்து அதிகம் யோசிக்கவில்லை. பந்துவீச்சில் முழு கவனத்தை செலுத்தி வருகிறேன். கடினமாக உழைத்து மீண்டும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெரிய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருப்பதால் சற்று பதட்டமாக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் நடராஜன் அறிமுகமானார். இதுவரை 24 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்படிக்க | மும்பை கேப்டனாக விரும்பினாரா ஹர்திக் பாண்டியா?