மாமல்லபுரம்: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தலும், 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பேரூராட்சியில் அடங்கிய பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துவது, பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார், காவல்துறை அதிகாரிகளுடன் மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா கழக விடுதியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து, அங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி யார் அராஜகம் செய்தாலும் வழக்குப் பதிவு செயது சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, செங்கல்பட்டு எஸ்பி அரவிந்தன், மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
