தமிழக மீனவர்களை மீட்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

ராமேசுவரம்:

கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தங்களது விசைப்படகுகளை மீட்டுத்தர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் விசைப்படகுகளை இலங்கை அரசு கடந்த 7-ந்தேதி முதல் ஏலம் விட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரையும், அவர்களது 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இலங்கையில் தவிக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

அவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக ராமேசுவரம் கடற்கரை மற்றும் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இலங்கையில் தவிக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் மீட்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நாளை (11-ந்தேதி) ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.