பகவத்கீதை வினாடி-வினா போட்டியில் முஸ்லிம் மாணவி முதலிடம்

அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் எட்யூட்டர் செயலி அகில இந்திய அளவில் பகவத்கீதை வினாடி-வினா போட்டியை நடத்தியது.
இந்த போட்டியில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி குஷ்புகான் முதலிடத்தை பிடித்தார். அவரது தந்தை அப்துல்கான் ஒரு தொழிலாளி ஆவார்.
பகவத்கீதை வினாடி- வினா போட்டியில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி குஷ்பு கூறியதாவது:-
எனது குடும்பத்தினரும், ஆசிரியர்களும் பகவத் கீதை போட்டியில் பங்கேற்க ஊக்குவித்தார்கள். பிற மதங்களின் இதிகாசங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள சொன்னார்கள்.அதனால் நான் நம்பிக்கையை பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்கிறேன்.
எனக்கு கற்றுத் தந்த மிக முக்கியமான பகுதி என்னவென்றால் பல மதங்கள் இருந்தாலும் மனித நேயம் அனைத்திற்கும் மேலானது.
இவ்வாறு அந்த மாணவி கூறினார்.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மால்தி மதுகர் கூறும்போது, மாணவி குஷ்பு புத்திசாலியான குழந்தை ஆவார். அவர் வேறுமதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் போட்டியில் முழு மதிப்பெண்கள் பெற்றார் என்றார்.
மாணவி குஷ்பு ஏற்கனவே விவேகானந்தர் போட்டியில் 1,600-க்கும் மேற்பட்ட வினாடி- வினாக்களுக்கு சரியான பதில்களை அளித்து முதல் பரிசு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.