‘ஹிஜாப்’ விவகாரத்தில் பா.ஜனதா அரசு தோல்வி: குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு :

பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் இந்த ஹிஜாப் விவகாரம் தொடங்கியது. இந்த விவகாரம் குறித்து இன்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மோதலுக்கு வழிவகுத்து கொடுத்துள்ளன. இந்த மோதல்கள் தனியார் கல்லூரிகளில் நடக்கிறதா?. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள்.

பா.ஜனதா தலைவர்களின் குழந்தைகள் யாரும் காவி கொடியை பிடித்து போராடவில்லை. அப்பாவி குழந்தைகளை போராட வைக்கின்றன. இன்னொருபுறம் ஹிஜாப் குறித்து முஸ்லிம் குழந்தைகள் போராடுகிறார்கள். அரசு பள்ளி-கல்லூரிகளுக்கு ஏழை மக்களின் குழந்தைகள் தான் வருகிறார்கள். இதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

வரும் நாட்களில் போராடும் குழந்தைகள் மீது வழக்கு போட்டு, கோர்ட்டுக்கு அலைய விடுவார்கள். இதனால் ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த விவகாரத்தை தூண்டிவிடுவதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும். கோர்ட்டில் இதுபற்றி விசாரணை நடக்கிறது. இந்த பதற்றமான சூழலில் கோர்ட்டு விரைவாக தீர்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்.

ஹிஜாப் விவகாரத்தை சரியான முறையில் நிர்வகிப்பதில் மாநில பா.ஜனதா அரசின் தோல்வி அடைந்திருப்பது தெரிகிறது. மண்டியா முஸ்லிம் மாணவிக்கு ஒரு அமைப்பு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் வாழும் அமைதி பூங்காவாக கர்நாடகம் திகழ வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.