'இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் உ.பி., தான்!' – சொல்கிறார் யோகி ஆதித்யநாத்!

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான் என, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

உத்தரகண்ட்
மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஆளுங்கட்சியான பாஜக, கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று பேரை முதலமைச்சராக பதவி அமர்த்தி உள்ளது. திரிவேந்திர சிங் ராவத், திரத் சிங் ராவத் ஆகியோருக்கு பிறகு, புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். தற்போது இவரது தலைமையில், சட்டப்பேரவைத் தேர்தலை
பாஜக
எதிர்கொள்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் சிங் ராவத் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி என்ற இடத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியைச் சேர்ந்த உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான். நாட்டின் பாதுகாப்பில் பாஜக எந்த விதத்திலும் சமரசம் செய்யாது. உத்தரகண்ட் மாநிலமும் அவ்வாறு ஆக வேண்டும். இங்கு கிரிமினல்களும், ரவுடிகளும் நுழைந்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. நாம் உத்தரகண்டையும் உத்தர பிரதேசத்தைப் யைப் போல் பாதுகாப்பான மாநிலமாக்க வேண்டும்.

இந்துக்களை அவமதிப்பு செய்ய காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நடக்கிறது. தாங்கள் இந்துவா இல்லையா என்று தெரியாதவர்களே தற்போது அதற்கு அர்த்தம் கூறுகின்றனர். இந்து என கூறிக் கொள்வதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என விவேகானந்தர் கூறினார். இந்து என்பது வகுப்பு வாத வார்த்தை கிடையாது. அது ஒரு கலாசார வார்த்தை. இந்தியாவில் உள்ள நம்பிக்கை என்னவோ அதை எதிர்ப்பதில் எப்போதும் காங்கிரஸ் கவனமாக இருக்கும்.

அதனால் தான் அவர்கள் ராமர் கோயிலை கட்டுவதை எதிர்த்தனர். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பொது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். உத்தரகண்ட் அரசு எப்போதும் சுற்றுலா துறைக்காக உழைத்து வருகிறது. இந்த மாநிலத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் காரணமாக பெரிய வேலைவாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.