பெண்ணை காக்க ரயில்முன் பாய்ந்த “ரியல் ஹீரோ” தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்..திக்திக் வீடியோ
போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற, உயிரை பணயம் வைத்து ரயில் முன் பாய்ந்து காப்பாற்றிய நபருக்கு சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.
வடமாநிலங்களில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் ரயில் விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தவறுதலாகவோ அல்லது தற்கொலைக்கு முயன்று ரயில் முன் சிக்குபவர்களை காப்பாற்றும் நபர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ரயில் முன் பாய்ந்த பெண்ணை ரயில்வே போலீசார் காப்பாற்றிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய பெண்ணை தொழுகை முடிந்து வந்த நபர் காப்பாற்றிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
புட்லூரில் அவசரமாக தண்டவாளத்தை கடந்த பெண்… ரயில் வடிவில் வந்த எமனால் பல பாகங்களாக சிதறிய உடல்

20 வயது இளம்பெண்
மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகர் அருகேயுள்ள பர்கேடி பகுதியைச் சேர்ந்த முகமது மெகபூப் என்ற 37 வயதான நபர் அப்பகுதியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்காக சென்றார். தொழுகை முடிந்தவுடன் தனது வீட்டுக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் ஓரமாக முகமது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பகுதியைச் சேர்ந்த பலரும் அதே பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென நெஞ்சை உறைய வைக்கும் ஒரு சம்பவம் நடந்தேறியது. சுமார் 20 வயதுடைய ஒரு இளம்பெண் பையை தூக்கிக்கொண்டு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அதிர்ச்சி சம்பவம்
அப்போது அதே தண்டவாளத்தின் சரக்கு ரயில் ஒன்று சற்று நெருக்கமாக வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் அச்சத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பீதியால் அலறி தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டார். அச்சத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கிக்கொண்ட அவரால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. இதைக்கண்டு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பலரும் அச்சத்தில் உறைந்து போய் நின்று கொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தில் சரக்கு ரயில் வந்து கொண்டிருந்ததை கவனித்தும், கொஞ்சமும் அச்சப்படாமல் தனது உயிரையும் பொருட்படுத்தாத முகமது மெகபூப் ரயில் முன் குதித்து அந்தப் பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் தண்டவாளங்களுக்கு இடையில் இழுத்து படுக்க வைத்தார்.

கண்ணீர் மல்க நன்றி
மேலும் அவரது தலைக்கு நேராக முகமதுவும் படுத்துக் கொண்டு அந்த பெண்ணை தலையை தூக்க விடாமல் பார்த்துக் கொண்டார். சரக்கு ரயிலின் 28 பெட்டிகளும் அவர்களை கடந்து செல்லும் வரை இருவரும் எழுந்து விடாமல் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டனர். இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள் இருவரையும் எச்சரித்து ரயில் கடந்த பின் அவர்கள் இருவரையும் தூக்கி நிறுத்தினர். மேலும் பெண்ணை காப்பாற்றிய முகமது மெகபூப் நிம்மதி பெருமூச்சு விட்டார். மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய அந்தப் பெண் குறித்து தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க முகம்மதுவுக்கு நன்றி கூறி ஆரத்தழுவி கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

பாராட்டும் மக்கள்
முகமது மெஹபூப் இளம் பெண்ணை காப்பாற்றிய வீடியோ தற்போதுதான் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. கடந்த ஐந்தாம் தேதி இரவு 8 மணி அளவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த முகமது மெகபூபின் நண்பரான சோயப் ஹஸ்பி என்பவர் மூலம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து பலரது கவனத்தை பெற்ற முகமதுவை பலரும் பாராட்டி வருகின்றனர் மரணப் பிடியில் இருந்த பெண்ணை காப்பாற்றிய முகமது மெகபூப்தான் வாழ்க்கையில் உண்மையான ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.