திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. திருமழிசை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். இதில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மாவட்ட தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனருமான கணேசன் ஆகியோர் முன்னிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, பெரிய அளவிலான ராட்சத பலூனையையும், வண்ண, வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் காவல் துணை ஆணையர் மகேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, வேளாண்மை உதவி இயக்குனர் சங்கரி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் கல்பனா, சாந்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சேகர், மதியழகன், ஜானகிராமன், இளநிலை உதவியாளர் ஜோசப், பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
