குமாரபாளையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீர் மாயம்

பள்ளிப்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கொக்கராயன்பேட்டை ஆலங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் நசீர் (வயது 32), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு தாசின் (26) என்ற மனைவியும், கிகனா (8) என்ற மகளும், சையத் கலாம் (7) என்ற மகன், முகமது உசேன் என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளனர். நசீருக்கும், தனது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் தாசின் கோபித்துக்கொண்டு அவருடைய தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் தாசின் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி தாய் வீட்டிலிருந்து தாசின் மற்றும் குழந்தைகள் 3 பேர், தாய் சாகிதாபானு அவரது கொழுந்தியாள் மோகன் மனைவி நாஜியா, குழந்தை நிஷால் ஆகிய 7 பேரை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இதுபற்றி நசீர் மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, மொளசி சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசின், அவரது குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் எங்கு சென்றனர்? என்ன ஆனார்கள்? என்று விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 7 பேர் காணாமல் போன சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.