பிரதமருக்கே உரிய பாதுகாப்பு அளிக்காத சரண்ஜித் சிங் பஞ்சாப்புக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்? – அமித்ஷா

லூதியானா:
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. சமீபத்தில் அந்தக் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண் டது.
 
இதையடுத்து, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் தேர்தல் பிரசார நடைமுறைகளில் மாற்றங்கள் வந்துள்ளன. அரசியல் கட்சிகள் வழக்கம்போல பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
பாரதிய ஜனதா கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது. இதனால் பஞ்சாப் மாநில தேர்தல் பிரசார களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் பா.ஜ.க. ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடிக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் மாநிலத்துக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சன்னி ஜி, ஒரு நொடி கூட நிர்வாகத்தை நடத்த உங்களுக்கு உரிமை இல்லை என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.