கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு: மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு..!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஹிஜாப், காவி உடை அணியும் பிரச்னை உடுப்பியில்தான் முதன் முதலில் வெடித்தது. இந்த போராட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது. இப்பிரச்னை தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை கடந்த வாரம் வியாழக் கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து பள்ளிக்கு வர மாணவர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், 1 முதல் 10ம் வகுப்புக்கு மட்டுமே பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மாணவிகளை பள்ளிகளில் விடுவதற்காக பெற்றோர்களும் வந்திருந்தனர். பள்ளிக்குள் சென்றதும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் அதை ஏற்க ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகாவில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.