ஹிஜாப்: எல்லோர் கைகளிலும் கறை

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது தடை செய்யப்பட்ட விவகாரம் தீயாய் பற்றி எரிகிறது. இதில் யார் தரப்பில் தவறு என்று யோசித்தால், அத்தனை தரப்பினர் கையிலும் கறை இருப்பதை உணர முடியும்.

அரசு தரப்பு செய்த தவறு என்ன?

உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், இங்கு பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்தக் கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.

கல்வி நிறுவன தரப்பு, “எங்களது உத்தரவுக்கு, இஸ்லாமிய மாணவிகள் பலரும் உடன்பட்டனர். ஆனால் மிகச் சில மாணவிகள் மட்டுமே வேண்டுமென்று தடைக்கு எதிராக ஹிஜாப் பிறகு புர்கா அணிந்து பிரச்சினை செய்கிறார்கள்” என்கிறது.

‘ஹிஜாப், புர்கா மட்டுமல்ல… மாணவனுக்கும் மாணவிக்கும் வேறு வேறு உடை என்பது தேவையில்லை. இருவருமே முழுக்கால் சட்டை அணிந்து வர வேண்டும்’ என்று 2018இலேயே உத்தரவிட்டு அமலாக்கியது பினராயி தலைமையிலான இடதுசாரி கேரள அரசு. அதே போல கடந்த (2021) வருடம் இன்னும் சில பள்ளிகளிலும் இதை நடைமுறைப்படுத்தியது. இதை அங்குள்ள இஸ்லாமிய மாணவிகளும் கடைப்பிடிக்கிறார்கள். அங்கு ஏன் பிரச்சினை வரவில்லை?

பினராயி விஜயன்

கேரளத்தில் நடப்பது இடதுசாரி அரசு. அந்த அரசு, எந்தவொரு மதத்திற்கும் எதிராகச் செயல்பாடாது; நடவடிக்கைகளி்ல் உள் நோக்கம் இருக்காது என்று நம்புகிறார்கள். ஆனால் கர்நாடகத்தில் நடப்பது பாஜக அரசு. பாஜகவின் இந்துத்துவக் கொள்கை ஒன்றும் ரகசியம் அல்ல. தவிர அதன் பல்வேறு நடவடிக்கைகள் இஸ்லாமியருக்கு எதிராக இருந்துள்ளன; இருந்துவருகின்றன என்பதை விளக்கத் தேவையில்லை. ஆகவே கர்நாடகத்தில் உள்ள இஸ்லாமியர்கள், மாநில அரசின் இந்த நடவடிக்கையில் உள்நோக்கம் இருப்பதாக நினைக்கிறார்கள்.

சரி, இஸ்லாமிய மாணவிகளில் சிலர், ஹிஜாப் மட்டுமின்றி புர்கா (உடலை முழுதும் மறைக்கும் ஆடை) அணிந்து கல்வி நிலையத்துக்கு வருகிறார்கள். அவர்களை உள்ளே விட கல்வி நிறுவன நிர்வாகம் மறுக்கிறது. இதைக்கூட ஏற்கலாம். காரணம், கல்வி நிலையத்தில் உடனடியாக உள்ளே விட அனுமதி மறுத்திருக்க வாய்ப்பில்லை. வாய் வார்த்தையாகப் பல முறை எச்சரித்த பிறகே இந்த நவடடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், புர்காவுக்கு எதிராக என்று காவிக்கொடியைத் தலையில் சுற்றியபடி வருகிறார்கள் இந்து மாணவர்கள் சிலர். இப்படி ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்பட்ட அந்த மாணவர்கள் மீது கல்வி நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எடுக்கும்படி அரசு அறிவுறுத்தி இருக்க வேண்டும் (அப்படி நடக்காது என்பது தெரிந்த விஷயம்தான்).

புர்கா அணிந்த மாணவியைச் சுற்றி இந்துத்துவ அமைப்பினர் பலர் சூழ்ந்து, “ஜெய் ஸ்ரீராம்” முழக்கமிட்டு மிரட்டுகின்றனர். அந்த பெண் பதிலுக்கு, “அல்லாஹூ அக்பர்” என முழங்கியபடியே செல்கிறார். தனியொரு பெண்ணைக் கும்பலாகச் சூழ்ந்து மிரட்டியவர்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. கர்நாடக பாஜக அரசு ஒரு சார்பாக செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது.

இஸ்லாமியப் பெண்கள்

அரசு உத்தரவிட்டாலும், கல்வி நிலைய நிர்வாகம் உத்தரவிட்டாலும், சீருடை என்பதை மீறி ஹிஜாப், பிறகு புர்கா அணிந்து வருவேன் என இஸ்லாமியப் பெண்களில் சிலர் நடந்துகொள்வதும் விமர்சத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

தங்கள் கலாச்சாரம், மத நம்பிக்கை என ஹிஜாப்புக்கு அவர்கள் விளக்கம் கொடுத்தால், அதே கலாச்சாரம், மத நம்பிக்கையில் கல்வி குறித்து என்ன இருக்கிறது என்பதை அவர்கள் ஆராய வேண்டும். பெண் கல்வி, மதத்தை மீறிய பொதுக்கல்வி தங்களது மதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதையும், கல்விச் சாலைக்கு வரும் அவர்கள் சிந்திக்க வேண்டும்.

கோப்புப்படம்

வெளியிலிருந்து திணிக்கப்படும் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அது இயல்பான எதிர்வினையும்கூட. ஆனால், அதே சமயம் ஹிஜாப் போன்றவற்றைப் பெண்களுக்குக் கட்டாயமாக்கும் மத சம்பிரதாயங்கள் குறித்தும் இஸ்லாமியப் பெண்களும் இஸ்லாம் பொதுச் சமூகமும் சிந்திக்க வேண்டும். இந்துத்துவர்கள் ஹிஜாபை எதிர்ப்பதையே காரணம் காட்டி ஹிஜாப் போன்றவற்றை முஸ்லிம் பெண்கள் மீது முஸ்லிம் பழமைவாதிகள் கூடுதல் அழுத்தத்தோடு திணிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் மறந்துவிட்க் கூடாது.

இந்துத்துவ இளைஞர்கள்

சில இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருகிறார்கள். அவர்களைக் கல்வி நிர்வாகம் வெளியேற்றுகிறது. இதில், இந்துத்துவ இளைஞர்களுக்கு என்ன வேலை? ஹிஜாப் அணிவது சரியோ, தவறோ, அது இஸ்லாமியச் சமூகத்தில் புழக்கத்தில் உள்ள பழக்கம். காவித்துண்டு என்பது அப்படியா? தவிர, பிரச்சினை, சில பெண்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும். இதில் மாணவர்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? ஹிஜாப் – புர்கா அணிந்த பெண்ணை கும்பலாக சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு மிரட்டுவது எந்த வகையில் ஏற்புடையது?

சுற்றிலும் ஆக்ரோஷமாக அத்தனை இளைஞர்கள். அந்தப் பெண்ணின் இடத்தில் நம் குடும்பத்துப் பெண்ணை நினைத்துப் பாருங்கள். வயிறு கலங்கும்!

ஆக, இந்து இளைஞர்கள், அவர்களைத் தூண்டிவிடும் இந்துத்துவ அமைப்புகள் மீதும் தவறு இருக்கிறது.

பகுத்தறிவாளர்கள்

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வகையினர் உண்டு. தங்களைப் பகுத்தறிவாளர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் எனச் சொல்லிக்கொள்வார்கள். இவர்கள் இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பார்கள். இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களை விமர்சிக்கவே மாட்டார்கள். இந்துப் பண்டிகைகளை கேலி செய்வார்கள். இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதோடு விருந்தும் உண்டு வருவார்கள். கேட்டால் நாங்கள் இந்துக்கள், எங்கள் மதம் பற்றித்தான் பேச முடியும் என்பார்கள். கடவுள் மறுப்பும் பகுத்தறிவும் மதங்களைக் கடந்தவை. தவிர, மனித உரிமை மீறல் என்னும் வகையிலும் பெண்களுக்கெதிராகத் திணிக்கப்படும் கட்டுப்பாடுகளைப் பற்றிப் பேச மதம் என்னும் எல்லையைப் பார்க்க வேண்டியதில்லை. ஆனாலும் இங்குள்ள பகுத்தறிவாளர்கள் பலர் மத வேலிக்குள் நின்றுதான் சீர்திருத்தம் பேசுகிறார்கள்.

ஹிஜாப் விவகாரத்திலும் அந்த பகுத்தறிவாளர்கள் இதே நிலைபாட்டைத்தான் தொடர்கிறார்கள். “கேரளாவில் ஹிஜாப் இல்லை என்பது மட்டுமல்ல; மாணவர்களைப் போல இஸ்லாமிய மாணவிகளும் முழு நீள கால்சட்டை, சட்டை அணிந்து வருகிறார்களே. கல்வி நிலையங்களில் ஹிஜாப், புர்கா எதற்கு” என்ற கேள்வியை அந்தச் சில இஸ்லாமிய மாணவிகளை நோக்கி எழுப்ப இவர்கள் தயாராக இல்லை.

“ஹிஜாப்புக்குத் தடையா… இஸ்லாமிய மக்கள் வெகுண்டெழுந்தால்..” என்றெல்லாம் பேசுகிறார்கள். பகுத்தறிவாளர் என தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும் சிலர் யு டியுபில் இப்படித்தான் பேசுகிறார்கள்.

கோப்புப்படம்

பகுத்தறிவாளர்களின் இத்தகைய செயலால் இரு ஆபத்துகள் ஏற்படுகின்றன. இஸ்லாமியர்கள், தங்கள் மதம் அறிவியல்பூர்வமானது சரியானது என இன்னும் அதிகமாக நம்ப ஆரம்பிக்கிறார்கள். தங்கள் மதத்தை யாரேனும் விமர்சித்தால் வெகுண்டெழுகிறார்கள். இன்னொரு புறம், இந்து மதத்தில் உள்ள தவறுகளை நியாயமாக விமர்சித்தாலும் அம்மக்கள், “இவர்கள் இந்து மதத்தைத்தான் விமர்சிப்பார்கள்” எனக் கருதி அதைப் பொருட்படுத்துவதே இல்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள்

இன்று, “சிறுபான்மையினரான எங்களது உரிமைகள் பறிக்கப்படுகிறது. பெண்களுக்கு அவர்கள் விரும்பிய உடையை அணிய உரிமை இல்லையா” என மனித உரிமைக் குரல் எழுப்புகிறார்கள் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

“ஹிஜாப் அணிவது அந்த பெண்களின் உரிமை” என்று புரட்சிக் குரல் கொடுப்பவர்கள், “ஹிஜாப் அணியாமல் இருப்பதற்கும் அந்தப் பெண்களுக்கு உரிமை உண்டு” என சொல்வார்களா? “ஹிஜாப், புர்கா அணியாத பெண்கள் இழிவானவர்கள்” என்று பொது வெளியிலேயே இவர்கள் கூறி வருகிறார்கள். ஹிஜாப் அணியக் கூடாது என்பது தவறு என்றால், ஹிஜாப் அணிந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதும் தவறுதானே!

பெண் உரிமை பற்றியும் இவர்கள் குரல் கொடுக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஜனவரி, விஜய் டிவியில், நீயா? நானா? தொடர் நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெண்களுக்கான ஹிஜாப் பற்றிய விவாதம் ஒளிபரப்பப்பட இருந்தது. உடனே இஸ்லாமிய அமைப்பினர் சிலர், எச்சரிக்கை விட, அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவே இல்லை. “ஹிஜாப் குறித்த விவாதம் நடந்தால் என்ன” என்று எந்தவொரு இஸ்லாமியரும் கேள்வி எழுப்பவில்லை. இதுதான் உரிமை குறித்த இவர்களது பார்வை.

இன்னொரு முக்கிய விஷமும் உள்ளது. இஸ்லாம் மதத்தில் இருந்து (மன ரீதியாக) வெளியேறிய முஸ்லிம்கள் மிகச் சிலர் உண்டு. அவர்கள், “எக்ஸ் முஸ்லிம்கள்” என்ற பெயரில் சமூகவலைதளங்களில் இயங்கி வருகிறார்கள். இஸ்லாம் மதம் குறித்த கேள்விகளை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைக்கிறார்கள். அவர்களது நாகரிகமான பதிவுகளுக்கு, இஸ்லாமியர்கள் பலர் அளிக்கும் பின்னூட்டங்கள், படிப்பதற்கே சகிக்காது. அத்தனை ஆபாசம், மிரட்டல். இஸ்லாமிய மதத்தை நாகரிகமாக விமர்சித்துவந்த கோவை பாரூக், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

சிறுபான்மையினரான இஸ்லாமியர்களில் இன்னும் சிறுபான்மையினராக இருக்கும் எக்ஸ் முஸ்லிம்களை – முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் – முஸ்லிம்களே ஏற்பதில்லை. தனி மனித உரிமை குறித்த நிலை இப்படித்தான் இருக்கிறது.
எக்ஸ் முஸ்லிம்கள்
இதைத்தான் சொல்கிறார்கள்.

அவர்கள், “இந்த ஹிஜாப் விவகாரத்தில், மத நம்பிக்கை என்ற அளவுகோலில் அணுகாமல் முஸ்லிம் பெண்களும் முஸ்லிம் ஆண்களைப்போல் சமூகத்தில் சமநிலையில் உயரவேண்டும் இங்கே 1970களுக்கு முன்பு பெண்கள் கல்விகளில் இப்படி ஒரு ஹிஜாப் நெருக்கடி இல்லவே இல்லை தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஃபாத்திமா பாபுவே இதற்கு சாட்சி. 1980களுக்கு பிறகு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் சவூதியின் வஹாபியக் கடும்போக்குச் சிந்தனைகள் வளர ஆரம்பித்த பிறகே இங்கே 2 வயது குழந்தை தொடங்கி 90 வயது முதியோர்வரை கண்ணியம் என்ற பெயரில் இவை திணிக்கப்பட்டன. ஆனால் இன்று சவூதியே ஹிஜாப், புர்கா கட்டாயமல்ல என அறிவித்துவிட்டது.

மருத்துவ அறிவு மேம்பட்ட இந்தகாலத்திலும் விதவைகளுக்கு இத்தா எனும் ஒதுக்கிவைத்தல் நிகழுகிறது சர்வசாதாரணமாக தலாக்குகள் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது. வணக்க வழிபாடுகளில்கூட இஸ்லாத்தில் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. வெள்ளிக்கிழமை மதியத் தொழுகையில் ஒரு பெண்ணால் இமாமாக இருந்து ஆண்களுக்கு தொழுகை நடத்திவைக்க முடியாது. ஜும்மா மிம்பரில் ஏறி குத்பா எனும் சமய உரை நிகழ்த்த அனுமதி இல்லை.

ஆண், பெண்களுக்கு திருமணத்திற்கு வயதை நிர்ணயம் செய்வது போல் ஹிஜாப் அணிய வயது நிர்ணயம் செய்யப்படவேண்டும். ஒரு வயதுப் பெண்குழந்தைக்கெல்லாம் சாக்லேட்டுக்கு பேப்பர் சுற்றுகிறோம் செல்போனுக்கு கவர் போடுகிறோம் என்று ஹிஜாபைத் தொங்கவிடும் கண்மூடித்தனமான அரேபிய ஆணாதிக்க அழுத்தம் தகர்க்கப்பட வேண்டும்.

கோப்புப்படம்

ஒரு முஸ்லிம் பருவப்பெண் அவள் விரும்பினால் ஹிஜாப்,புர்கா அணியலாம். விரும்பாவிட்டால் அணியாமலும் இருக்கலாம். அதைப் பெற்றோரோ, கணவனோ, உறவினர்களோ, மதகுருக்களோ கட்டாயப்படுத்துவது கூடாது. ஹிஜாபோ புர்காவோ அவள் விரும்பிய வண்ணத்தில் அவள் விரும்பி அளவில் அணியலாம் நிறமோ அளவோ கட்டாயமாக்க கூடாது என்று மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்றினால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஹிஜாப், புர்கா வியாபாரமும் விலையும் 70% குறைந்துவிடும் “ என்கிறார்கள் இந்த எக்ஸ் முஸ்லிம்கள்.

இந்தச் சீர்திருத்தக் குரலை இஸ்லாமியப் பழமைவாதிகள் வன்மையாக எதிர்க்கிறார்கள். இஸ்லாமியப் பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதைத் தங்கள் உரிமையாக நினைக்கிறார்கள்.

இப்படி எல்லாத் தரப்பினரும் எண்ணெய் ஊற்றி வளர்த்த நெருப்புதான் இப்போது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.