இந்தியாவும், சீனாவும் எல்லை ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும் ஜெய்சங்கர் கருத்துக்கு சீனா பதில்

பீஜிங், 
ஆஸ்திரேலியாவில் ‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு சீனாதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அவரது கருத்துக்கு பதில் கூறும் விதமாக சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியா-சீனா இரு நாடுகளும் தாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும், எல்லைப் பகுதியில் கூட்டாக அமைதியைப் பராமரிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் சீனாவின் நிலைப்பாடு.
நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு தரப்பும் ராஜதந்திர வழியாகவும், ராணுவ வழியாகவும் தொடர்பை தொடர்ந்து பேணும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.
‘குவாட்’ வெளியுறவு மந்திரிகள் கூட்டத்துக்கு முன்பாக, அந்தக் கூட்டமைப்பு, தங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு கருவி என்று சீனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.