வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

புதுடெல்லி: ‘தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்துகாகவே 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, ராமதாஸ், ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாமக உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தங்கள் தரப்பு வாதங்களையும் விசாரணையின் போது கேட்க வேண்டும் என்று பாலமுரளி, வி.வி.சாமிநாதன், முக்குலத்தோர் புலிப்படை, விஜயகுமார் உட்பட 10 மேற்பட்டோர் கேட்வியட் மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன், குமணன் ஆகியோர் தங்கள் வாதத்தில், ‘வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்துதான் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில்தான், இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அம்பா சங்கர் அறிக்கையின்படி, வீடு தோறும் சென்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சட்டம் இயற்றியதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று அட்டவணை 9ல் சட்ட பாதுகாப்பும் பெறப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் அமர்வில் உள்ளதால், தற்போதைய இந்த 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தையும் அரசியல் சாசன உயர் அமர்வுதான் முடிவு செய்ய முடியும்,’ என தெரிவித்தனர்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகேஸ்வர ராவ், ‘தமிழகத்தில் வன்னியர்களுக்கு தவிர வேறு பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘தமிழகத்தில் 3 பிரிவினருக்கு மட்டும்தான் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 105வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் இதற்கு பொருந்துமா?, அதன்படி மாநில அரசு முடிவெடுக்க அதிகாரம் உள்ளதா என்பதை உயர் அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும்,’ என தமிழக வழக்கறிஞர்கள் பதிலளித்தனர். ஆனால், இந்த இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகளை தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ‘இந்த விவகாரத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. அரசியல் லாபத்திற்காக முந்தைய அரசு தேர்தல் நேரத்தில் இந்த இடஒதுக்கீட்டை அவசர கதியில் வழங்கியது. இந்த வழக்கை அரசியல் சாசன உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டாம். அங்கு தாமதம் ஏற்படும். தற்போதையே அமர்வே விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எந்தவொரு தரவுகளும் இல்லாமல், வன்னியருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டது சமத்துவத்துக்கு எதிரானது. எனவே, இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும்,’ என தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் ஒருமித்து கருத்து தெரிவித்தால், இந்த வழக்கை அரசியல் சாசன உயர் அமர்வுக்கு மாற்றுவதற்கான இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்,’ என கூறி, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.