அண்ணியை அடித்த `லட்சிய நடிகர்' எஸ்.எஸ்.ஆர்., மகள்; அதிகாலையில் விசாரித்த முதல்வர் அலுவலகம்?!

‘லட்சிய நடிகர்’ என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப் ஶ்ரீபட்ட மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் வீட்டுச் சண்டை காவல் நிலையம் வரை வந்து பரபரப்புச் செய்தி ஆகியிருக்கிறது.

எம்.ஜி.ஆர்., நம்பியார் காலத்தில் சினிமாவில் நடித்து, பிறகு அரசியலிலும் ஈடுபட்ட மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. எஸ்.எஸ்.ஆர் இருந்த போது மட்டுமல்ல, அவர் மறைந்து வருடங்கள் பல கடந்தும் இன்றும் கூட்டுக்குடும்பமாகவே வசித்து வருகின்றனர், அவரது வாரிசுகள்.

எஸ்.எஸ்.ஆர். மகள் லட்சுமி, எஸ்.எஸ்.ஆரின் மகன் கண்ணனின் குடும்பம் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிற சூழலில், நேற்று லட்சுமிக்கும் அவரது சகோதரர் மனைவிக்கும் இடையே வீட்டுக்கு காவலாளியை நியமிப்பது தொடர்பாக வாக்குவாதம் உண்டானதாகத் தெரிகிறது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், லட்சுமி தனது அண்ணியை அடித்துவிட்டதாகத் தெரிகிறது.

லட்சுமியின் அண்ணி இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க, பதிலுக்கு, லட்சுமியும் தனது அண்ணி மீது ஒரு புகார் தந்திருக்கிறார். இது தொடர்பாக மீடியாவில் செய்தி வெளியானதுமே இன்று காலையிலேயே முதல்வர் அலுவலகத்திலிருந்து எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு நடந்தது குறித்துக் கேட்டார்களாம்.

s s rajendran

எஸ்.எஸ்.ஆர் மகன் கண்ணனை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘எல்லா வீட்டுகள்லயும் நடக்கிற நாத்தனார் சண்டைதான். துரதிர்ஷ்டவசமா போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிடுச்சு. நாலு நாள்ல பிரச்னை சரி ஆகிடும், அதனால இதுபத்தி மேற்கொண்டு எதையும் பேச விரும்பலை’ என முடித்துக் கொண்டார்.

லட்சுமியை நாம் தொடர்பு கொண்ட போது அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.