பாஜகவுக்கு ஓட்டுபோடவில்லை என்றால் புல்டோசரை விட்டு ஏற்றுவோம்! : தெலங்கானா எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

ஐதராபாத்: உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அதிகளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக அதிகளவில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களித்துள்ளதாக சிலர் தகவல்களை பரப்பி வருகின்றனர். அவ்வாறு யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் யார் என்பதை கண்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் அவர்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றுவோம். எங்களுக்கு வாக்களித்த பகுதிகள் எது? வாக்களிக்காத பகுதிகள் எது என்பதை கண்டறிவோம். ஆயிரக்கணக்கான  புல்டோசர்கள் மற்றும் ஜேசிபிகள் வாங்கப்பட்டு வருகிறது. இவை எதற்காக  பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன்.  யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் ஆவதை விரும்பாத துரோகிகளுக்கு ஒன்றை  தெரிவித்துக் கொள்கிறேன்; நீங்கள் உத்தரபிரதேசத்தில் இருக்க வேண்டுமானால்  ‘யோகி – யோகி’ என்று கோஷமிட வேண்டும். இல்லாவிட்டால், மாநிலத்தை விட்டு ஓட  வேண்டிவரும். எனவே மீதமுள்ள கட்டங்களில் வாக்காளர்கள் (குறிப்பிட்ட சமூகத்தினர்) பாஜகவுக்கு தங்கள் வாக்குரிமையை செலுத்த வேண்டும்’ என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.