உ.பி. திருமண விழாவில் விபத்து: கிணற்றில் தவறி விழுந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 13 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் நடந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 13 பேர் பலியாகினர்.

உ.பி. மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நேற்றிரவு ஒரு திருமண விழா நடந்தது. இந்விழாவில் கலந்து கொண்டவர்கள் கிணற்றின் மீதிருந்த சிமென்ட் ஸ்லாபில் நின்றிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த ஸ்பாப் உடைந்தது. அதில் நின்றிருந்தவர்கள் கிணற்றில் விழுந்தனர். இவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

முதல் தகவலை நேற்றிரவு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம், திருமண நிகழ்ச்சியில் கிணற்றின் மீதிருந்த சிமென்ட் ஸ்லாப் நொறுங்கியதில் அதில் அமர்ந்திருந்தவர்கள் உள்ளே விழுந்து 11 பேர் இறந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாரம் தாங்காமல் ஸ்லாப் உடைந்துள்ளதாகத் தெரிகிறது என்றார்.

ஆனால், சிறிது நேரத்தில் ஏடிஜிபி அகில் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துவிட்டது என்று கூறினார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “உ.பி. விபத்துச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இச்சம்பவம் தொடர்பாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் நேற்றிரவு ,தனது ட்விட்டரில், மீட்புப் பணிகளை முடுக்கிவிடவும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.