தலிபான் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சிறுவர்களுக்கு இலவசமாக பாடம் கற்பிக்கும் பெண்

ஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு பல்வேறு தடைகளை விதித்தது. குறிப்பாக, குழந்தைகள், பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்து மக்களை துன்புறுத்தியது. தலிபான் கட்டுப்பாடு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசாங்க சொத்துக்கள் முடக்கம் மற்றும் தாலிபான் மீதான சர்வதேச தடைகள், வெளிநாட்டு உதவி நிறுத்தம், ஆகியவற்றால் அந்நாட்டு மக்கள் கடும் வறுமையில் சிக்கியுள்ளனர். இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தெருவில் வியாபாரம் செய்து வரும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் கற்பித்து வருகிறார் காபூலை சேர்ந்த சோடா நஜந்த் என்ற பெண்.

உயர்நிலைப் பள்ளி பட்டதாரியான நஜந்த், காபூல் பூங்கா ஒன்றில் சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணி நேரம் பாடம் நடத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நஜந்த் கூறியதாவது:-

சிறுவர்களுக்கு முதலில் தாரி (ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழி) கற்பிக்க ஆரம்பித்தேன். அவர்களுக்கு எப்படி படிக்க வேண்டும் என்றும் பின்னர் படிப்படியாக கணிதத்தையும், குரானையும் கற்பிக்க ஆரம்பித்தேன். மாணவர்கள் இப்போது ஆங்கிலம் கற்க ஆர்வமாக உள்ளனர்.

இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த குழந்தைகள் முதலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அவர்களை வேலை செய்ய ஊக்குவித்தேன். பிச்சை எடுப்பதை நிறுத்தி அவர்களைப் படிக்கத் தூண்டினேன். ஊக்குவிப்பது தான் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
60 ஆண்டுகளில் முதல் முறையாக சுறா தாக்கி ஒருவர் பலி: சிட்னி கடற்கரை மூடல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.