வாய் சவடால் செய்து, அராஜக ஆட்சி நடத்தி வரும் திமுகவுக்கு கடிவாளம் போட வேண்டும்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை.!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 வாக்களிப்பீர் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு! நலம் அனைத்தும் நடைமுறைக்கு வர, வளமான தமிழ் நாடு உருவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிபெறச் செய்திட வாக்காளப் பெருமக்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 19.2.2022 அன்று நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமும், புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட மக்கள் சின்னமுமான, ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களித்து, உள்ளாட்சி நிர்வாகத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் பணிவோடு வேண்டுகிறோம்.

கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் திமுக-வின் ஆட்சியை எடைபோட்டுப் பார்த்து, தேர்தல் நாளன்று உங்களது பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அவருடைய வழி வந்த கழகத்தின் ஆட்சியையும் எண்ணிப் பாருங்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்றால் அது, தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் ஆட்சியாக, உண்மையான மக்களாட்சியாக, ஊருக்கு உழைப்பதில் உள்ளம் மகிழ்கின்ற மக்கள் தொண்டர்களின் ஆட்சியாகத் திகழ்ந்ததை வரலாறு சொல்லும்.

பொய்யான வாக்குறுதிகளை, மனம் போன போக்கில் மக்களிடம் கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக-வின் கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில், அந்தக் கட்சியினரின் வன்முறையும், அராஜகமும், அடாவடியும் எண்ணில் அடங்காதவை. நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களிலும் திமுக-வினரின் ஆட்சி, அதிகாரம் என்ற நிலை ஏற்பட்டால் குறுநில மன்னர்களைப் போலவும், கொடுங்கோல் தண்டல்காரர்களைப் போலவும் அந்தக் கட்சியினர் மக்களுக்குத் தரப் போகும் தண்டனைகளை, அவர்களது கடந்த கால வரலாறு நம் கண் முன்னே நிறுத்துகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வெற்றி பெற்று நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களில் மேயர்களாகவும், நகர மன்றத் தலைவர்களாகவும், பேரூராட்சி மன்றத் தலைவர்களாகவும், மாமன்றங்களின் உறுப்பினர்களாகவும் பணியாற்றும் போது, எப்படி மக்களிடம் அன்பாகவும், பணிவாகவும், மக்களுக்குத் தொண்டு செய்யும் ஊழியர்களாகவும் பணியாற்றினார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வன்முறையை வெறுக்கின்ற, சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் விரும்புகின்ற எளிய மக்களின் இயக்கம் அல்லவா! நீட் தேர்வு ரத்து, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாதம் ரூ. 1,000/- உதவித் தொகை, சமையல் சிலிண்டருக்கு ரூ. 100/- மானியம், விவசாயக் கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை குறைப்பு என்று, தேர்தல் நேரத்தில் ஊர், ஊராகச் சென்று வாக்குறுதி அளித்த திமுக-வினர் இன்று, இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறதே என்று மக்களை மீண்டும் ஏமாற்றுகின்றனர்.

கட்டுப்பாடுகள் இன்றி, வாய்ச் சவடால் செய்து, அராஜக ஆட்சி நடத்திவரும் திமுக ஆட்சிக்கு உரிய கடிவாளம், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போடப்பட்டால் மட்டுமே, திமுக-வை கட்டுப்படுத்தி தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாய்க் காப்பாற்ற முடியும் என்பதை நினைவில் கொண்டு தேர்தல் நாளான்று முடிவெடுங்கள்.

சூறாவளியாக தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக்கும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச் சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் கழக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோர வேண்டும். மேலும், நம் முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அதே போல், வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும். வாக்குப் பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.