உக்ரைன் கிழக்கு பகுதியில் 29 முறை குண்டுவீசி தாக்குதல்- பதட்டம் அதிகரிப்பு

கிவ்:

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன. மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் ஆயுதங்களை அனுப்பி வைத்தன.

இதனால், ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தன.

அதன் பின்னர், பல்வேறு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை என பலதரப்பு செயல்பாடுகளுக்கு பின்னர் கிரிமியாவில் நடைபெற்று வந்த போர் பயிற்சி நிறைவு பெறுவதாகவும், படைகள் முகாம் திரும்புகின்றன என்றும் ரஷியா அறிவித்தது.

ஆனால், உக்ரைன் எல்லையில் தனது படைகளை குறைப்பதாக ரஷியா கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து எல்லைகள் ரஷிய படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த படைகள் இன்னும் ஓரிரு நாட்களில் உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், உக்ரைன் மீது இன்று குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. டான்பஸ் உக்ரைனின் எல்லையோர மாகாணமாகும். இந்த மாகாணத்தில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றது.  அந்த கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது இந்த தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் 29 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டதாகவும், இந்த  தாக்குதலில் மழலையர் பள்ளியில் பணியாற்றி வந்த 2 ஆசிரியர்கள் காயமடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு உள்ளான கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உக்ரைன் கிழக்கு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.