சிரியாவில் ஐ.எஸ் – குர்து படையினர் மோதலில் 123 பேர் பலி

சிரியாவில் குர்து படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடத்த மோதலில் 123 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பிரிட்டனில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “குர்து கட்டுபாட்டில் உள்ள ஹசாகா நகரில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள குவேரன் சிறைச்சாலை மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் குர்து படையினருக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் சிறையை நெருங்கவிடாமல் குர்து படையினர் தடுத்தனர். எனினும், ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைவர்கள் சிலரை விடுதலை செய்து, சிறைலிருந்து ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

இந்த மோதலில் குர்து படையினர் 39 பேர் பலியாகினர்; ஐ.எஸ் தீவிரவாதிகள் 77 பேர் பலியாகினர். சிறையிலிருந்த அதிகாரிகள் சிலரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இதுவரை 123 பேர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள், குர்து சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ஐ.எஸ். படை தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க உதவியுடன் குர்து படை வீரர்கள், ஐ.எஸ் படைக்கு எதிராக தீரமாகப் போரிட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு தனது ஆதரவை அமெரிக்கா திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.