தமிழ்த் தாத்தா உ.வே.சா. சிலைக்கு அரசு மரியாதை.!

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாளை முன்னிட்டுநாளை காலை தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட இருக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதைய்யரின் சிறப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆணடும் அவரின் பிறந்த நாளன்று அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் மரியாதை செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அவரின் 168-வது பிறந்த நாளான நாளை சென்னை காமாரஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் திரு உருவச் சிலைக்குக் காலை 10 மணிக்கு மலர்த்தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வரும் இந்த மாலை அணிவிப்பு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், தமிழ் அறிஞர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.வே. சாமிநாதையர், தமிழ் மொழிக்கு பெருந்தொண்டு செய்தவர் ஆவார். பல அரிய தமிழ்ச் சுவடிகளைத் திரட்டி, தொகுத்து தமிழுலகிற்குத் தந்தவர். இவர் மட்டும் இப்பணியைச் செய்யாமல் போயிருந்தால் எத்தனையோ பல அரிய தமிழ்ச் சுவடிகள் தற்கால சந்ததியினருக்கு கிடைக்காமலேயே போயிருக்கும்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களுள் பலவற்றையும், தமிழ் விடுதூது போன்ற வேறு பல அரிய தமிழ் நூல்களையும் அச்சு வடிவில் கொண்டு வந்து எதிர்காலத் தலைமுறையினருக்கு வழங்கியவர்.

மேலும் இவரின் நினைவைப் போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் உத்தமதான புரத்தில், அவர் வாழ்ந்த இல்லம் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.