ரஷ்யா-உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்:
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நேட்டோ அமைப்பு உள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை தணிக்க பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. ரஷ்யாவும், உக்ரைனும் போர் பதற்றத்தை தணித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியது.
இந்த நிலையில் நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான டி.எஸ். திருமூர்த்தி பேசியதாவது:-
ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையே உடனடியாக பதற்றத்தை தணிக்க ஒரு தீர்வை கண்டுபிடிப்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தை தேவை. இந்தியா அனைத்து தரப்பினருடன் தொடர்பில் உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பது எங்களின் கருத்து ஆகும்.
அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் நீண்ட கால அமைதி மற்றும் ஸ்திரத்தன் மையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு பதற்றத்தை உடனே தணிக்கக்கூடிய ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.
ரஷ்யா – உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உக்ரைனில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பல பகுதிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு தான் இந்தியாவுக்கு முக்கியம்.
போர் பதற்றத்தை தணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.