கழுதைக்கு "கேசிஆர்" படம் மாட்டி போராடிய காங்… தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!

கழுதை முகத்தில் தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவின் படத்தை மாட்டிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவரை, கழுதையைத் திருடியதாக குற்றம் சாட்டி போலீஸார் கைது செய்து உள்ளே வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானாவின் கரீம் நகரில்தான் இந்தக் கூத்து அரங்கேறியுள்ளது. சமீபத்தில் கரீம் நகர் மாவட்டம் ஹுசுராபாத் நகரில், தெலங்கானா தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் வெங்கட் பல்மூர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்கள் கழுதைகளை கூட்டி வந்து அதன் முகத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் படத்தை மாட்டி கோஷமிட்டனர்.

இதையடுத்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் போலீஸில் புகார் கொடுத்தனர். அதில் கழுதையைத் திருடி போராட்டம் நடத்தியதாக கூறியிருந்தனர். போலீஸாரும் இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்து, போராட்டம் நடத்திய பல்மூர் உள்ளிட்டோரைக் கைது செய்தனர். அவர்கள் மீது கழுதையைத் திருடியதாக வழக்குப் போடப்பட்டுள்ளது.

பல்மூர்தான் இந்த வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தவிர மேலும் 6 பேரும் கழுதை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், இதை நம்பவே முடியவில்லை. தெலங்கானா முதல்வர் கே.சி.ஆருக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைக்கு மேல் அதிகார போதை ஏறி விட்டால் எந்த அளவுக்கு பைத்தியம் முற்றும் என்பதை இவர்கள் காட்டி விட்டார்கள். மாணவர் தலைவர் போடப்பட்டிருப்பது பொய்யான, கேலிக்கூத்தான வழக்கு. தெலங்கானா மாநில ஹிட்லரின் செயலைக் கண்டிக்க வார்த்தையே கிடையாது என்றார் அவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.