வாக்குவச்சாவடி மாற்றாததால் பரமத்திவேலூரில் தேர்தல் புறக்கணிப்பு: கருப்புக் கொடி ஏந்தி மக்கள் போராட்டம்

நாமக்கல்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலை பரமத்திவேலூர் பேரூராட்சி 2-வது வார்டு மக்கள் புறக்கணிப்பு செய்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டபோது 3-வது வார்டு 2-வது வார்டாக மாற்றப்பட்டது. இதுதவிர, வார்டுக்கு உட்பட்ட ராஜாநகருக்கான வாக்குச்சாவடி 3 கி.மீ தள்ளி அமைக்கப்பட்டது. இதனால், ராஜாநகர் பகுதி மக்கள் தேர்தல் சமயங்களில் நீண்ட தூரம் சென்று வாக்களித்து திரும்ப வேண்டிய நிலை உருவானது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்படி சம்மந்தப்பட்ட ராஜாநகர் மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்ததுடன் நேரிலும் பலமுறை தெரிவித்துள்ளனர். எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் அதிருப்தியடைந்த ராஜாநகரைச் சேர்ந்த மக்கள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனர்.

இதன்படி இன்று நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலை குப்புச்சிபாளையம் 2-வது வார்டு ராஜாநகர் மக்கள் புறக்கணிப்பு செய்தனர். மேலும், வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றியும், ஆடைகளில் கறுப்பு பட்டை அணிந்தும் தங்களது அதிருப்தியை வெளியப்படுத்தினர்.

வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவா்த்தை நடத்தினர். எனினும், வாக்குச்சாவடி மாற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.