40 வருடங்களை நிறைவு செய்யும் 'மூன்றாம் பிறை'

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பாலுமகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்து 1982ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வெளிவந்த படம் 'மூன்றாம் பிறை'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான டாப் 10 படங்களில் இந்தப் படமும் உண்டு என்பதை அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

30வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பாலுமகேந்திராவுக்கும் பெற்றுத் தந்தது இந்தப் படம். சென்னையில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய படம்.

பாலுமகேந்திரா இயக்கம், ஒளிப்பதிவு என இரண்டிலுமே தனி முத்திரை பதித்தார். இளையராஜாவின் இசையில் ஒவ்வொரு பாடலுமே இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. கண்ணதாசன், வைரமுத்து, கங்கை அமரன் பாடல்களை எழுதியிருந்தனர். கண்ணதாசன் கடைசியாக எழுதிய சினிமா பாடலான 'கண்ணே கலைமானே' இப்படத்தில் இடம் பெற்றது.

கமல்ஹாசனுக்கு மிகச் சரியாக ஈடு கொடுத்து ஸ்ரீதேவியும் நடித்திருந்தார். ஸ்ரீதேவிக்கும் சிறந்த நடிகைகக்கான தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும் என பலரும் அப்போது கருத்து தெரிவித்திருந்தனர். கமல், ஸ்ரீதேவி கதாபாத்திரம் மட்டுமல்லாது அந்த சுப்பிரமணி நாய்க்குட்டி கூட ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழ் சினிமாவில் பல கிளைமாக்ஸ்கள் வந்தாலும் இப்போதும் 'மூன்றாம் பிறை' கிளைமாக்சைப் பற்றிப் பேசாதவர்கள் குறைவு. அந்த அளவிற்கு அந்த கிளைமாக்ஸ் ரசிகர்களிடம் கண்ணீரை வரவழைத்தது.

தமிழிலிருந்து ஹிந்தியில் 'சாத்மா', என்ற பெயரில் பாலுமகேந்திரா, கமல்ஹாசன், ஸ்ரீதேவி கூட்டணி மீண்டும் இணைந்தது. ஸ்ரீதேவியின் ஹிந்தி என்ட்ரிக்கு இந்தப் படம் பெருமளவில் உதவியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.