நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சென்னை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படடது. இதில், மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மற்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்காளர்கள் ஒவ்வொருவராக வந்தபடி இருந்தனர். 8 மணிக்கு பிறகு வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள் எண்ணக்கை அதிகரித்தது. எனவே, 8 மணிக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 3 மணி நிலவரப்படி 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் – 39.13%, நகராட்சிகளில் – 53.49%, பேரூராட்சிகளில் – 61.38% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. 
5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே 5 மணிக்கு பிறகு வாக்களிக்க வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 
பண விநியோகம், கள்ள ஓட்டு புகார், வாக்குவாதம், போராட்டம் என பல்வேறு இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதன்பின்னர் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 
தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு மையங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றம் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படைகள் நிறுத்தப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.