இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை!: கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை  சேர்ந்த 12 மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களின் வழக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருக்கும் 12 மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் அவர்களுடைய இரண்டு மீன்பிடி படகுகளை அரசு உடமையாக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து 12 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என கூறப்படுகிறது. தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. பாரம்பரிய முறைப்படி கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கவும், இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவத்தை தடுத்து நிறுத்தவும் ஒன்றிய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.