ரஷ்யாவுக்கு ஆதரவா.. இந்திய மாணவர்கள் மீது தாக்குல்.. உக்ரைன் ராணுவம் வெறிச்செயல்!

ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பதால், இந்திய மாணவர்களை, எல்லையில் வைத்து தாக்கியுள்ளது
உக்ரைன்
ராணுவம். இந்திய மாணவர்களின் வருகைக்காக காத்திருக்கும் அவர்களது பெற்றோருக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உக்ரைன் ஒருபோதும் இந்தியாவுக்கு நட்பாக அது இருந்ததில்லை. அது அடிப்படையில் ஒரு ஆயுத வியாபாரி. உலகின் பல நாடுகளுக்கும் ஆயுதம் விற்கும் நாடு. அமெரிக்கா, ரஷ்யா போல உக்ரைனும் ஒரு ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நாடு.

இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியபோது அதை எதிர்த்தது. ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு எதிராக வாக்களித்தது. மேலும் பாகிஸ்தானுக்கும் ஆயுதங்களைக் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டது. இலங்கைக்கும் அதேபோல ஆயுதங்களைக் கொடுத்த சேட்டைக்கார நாடுதான் உக்ரைன்.

மாறாக, இந்தியா, ரஷ்யாவின் நீண்ட கால நண்பன். நேரு – இந்திரா காந்தி – ராஜீவ் காந்தி காலத்தில் இந்த நட்பு மிகப் பிரமாதமாக இருந்தது. 1971 இந்தியா பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா போர்க்களத்தில் செயல்பட எத்தனித்தபோது அதை ரஷ்யாவை வைத்துத்தான் முறியடித்தது இந்தியா. இதனால்தான் வங்கதேசம் பிறந்தது, பாகிஸ்தான் பின்வாங்கி ஓடியது.

புடின் புது “ஸ்கெட்ச்”.. ராணுவத் தாக்குதல் வேகம் திடீர் குறைப்பு.. உக்ரைன் குழப்பம்!

பாஜக ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடன் நட்பை வலுப்படுத்திய போதிலும் கூட ரஷ்யாவை முழுமையாக இந்தியா உதறி விடவில்லை. ரஷ்யாவுடனான நட்பும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இப்போதைய ரஷ்யா – உக்ரைன் போரின்போதும் கூட இந்தியா யாரையும் பகிரங்கமாக ஆதரிக்கவில்லை,எதிர்க்கவும் இல்லை. நடுநிலைதான் வகித்தது. ஐ.நா. சபையில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்திலும் கூட இந்திய வேறு சில நாடுகளுடன் இணைந்து நடுநிலைதான் வகித்தது.

இது உக்ரைனை ஆத்திரப்படுத்தியுள்ளது போலும். உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு கிளம்பிச் செல்லும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி தனது சின்னப்புத்தியைக் காட்டியுள்ளது உக்ரைன். இந்தியா திரும்பிய மாணவ மாணவியர் இதுதொடர்பாக பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

உக்ரைன் – போலந்து எல்லையில் வைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளனர் மாணவர்கள். உக்ரைனுக்குள் போய் இந்திய மாணவர்களை மீட்க முடியாததால் அவர்கள் ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிக்கு நடந்தும், வாகனங்கள் மூலமாகவும் அழைத்து வரப்பட்டனர். அப்படி போலந்து நாட்டு எல்லைப் பகுதிக்கு வந்தவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் மோசமாக நடத்தியுள்ளனர். சிலரை தாக்கவும் செய்துள்ளனர்.

ரஷ்யாவைக் கண்டித்து ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க மாட்டீர்களா என்று கேட்டு தாக்கியுள்ளனர். இந்திய மாணவர்களை அடித்தும், உதைத்தும், எட்டித் தள்ளியும் உள்ளனர். சிலரது செல்போன்களை பிடுங்கியுள்ளனர்.

அணு ஆயுதங்களை ரெடி பண்ணுங்க.. புடின் திடீர் உத்தரவு.. உருக்குலையுமா உக்ரைன்?

இதுகுறித்து சந்தீப் கெளர் என்ற மாணவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆண்களையும், பெண்களையும் தனித் தனி வரிசையில் நிற்க வைத்த உக்ரைன் பாதுகாப்புப் படையினர் எங்களை போலந்து எல்லைக்குள் அனுமதித்தனர். அப்போதுதான் தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டனர். எனது சகோதரனை உக்ரைன் படையினர் தாக்கி கீழே தள்ளினர்.

எல்லைப் பகுதியில் உக்ரைன் அதிகாரிகளிடம் பேசி சுமூகமான முறையில் எங்களை மீட்க இந்திய அதிகாரிகள் யாரும் வரவில்லை. தூதரகத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. போலந்து எல்லைக்குள் வந்த பிறகுதான் இந்திய தூதரக அதிகாரிகளைப் பார்க்க முடிந்தது. உக்ரைன் எல்லைக்குள் இந்திய அதிகாரிகள் யாருமே இல்லை.

உக்ரைன் எல்லைக்குள் இந்தியர்களை மோசமாக நடத்துகிறார்கள். குறிப்பாக இந்திய ஆண்களை மோசமாக நடத்தினர். நிலைமை மோசமாக உள்ளது என்றார் அவர்.

உக்ரைனில் போய் படிக்க இந்தியர்கள் குவிவது ஏன்.. “நீட்” தேர்வுதான் காரணம்?

இந்த புகார் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்கி பதிலளிக்கு மறுத்து விட்டார். இந்தியா, ரஷ்யாவுக்கு எதிராக வெளிப்படையாக செயல்பட மறுத்திருப்பதால் உக்ரைன் இந்தியர்கள் மீது கோபமடைந்துள்ளதாம். இதனால்தான் இந்திய மாணவர்களை தாக்கும் வெறிச் செயலில் அது இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரை அழைத்து மத்திய அரசு மிகக் கடுமையான எச்சரிக்கை விட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகப் பெரிய அபாயம் ஏற்படும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.