"செசன்யா ஸ்டைல்" அட்டாக்.. புடின் போடும் புது பிளான்.. என்னாகப் போகுதோ உக்ரைன்!

போர் தொடங்கி 6 நாட்களாகியும் இன்னும் உக்ரைனை முழுமையாக வீழ்த்த முடியவில்லை ரஷ்யாவால். இதனால் அடுத்து மிகவும் அதிரடியான தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது செசன்யாவிலும், சிரியாவிலும் கடைப்பிடித்த அதிரடி தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் தற்போது ரஷ்யா மெல்ல மெல்ல வேகம் கூட்ட ஆரம்பித்துள்ளது. இதுவரை பொதுமக்கள் தரப்பை அதிக அளவில் தீண்டாமல் இருந்த ரஷ்யா தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும் குறி வைக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ரஷ்யர்களின் போர் தந்திரங்களில் மாற்றம் வர ஆரம்பித்துள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

6 நாட்களாகியும் உக்ரைன் முழுமையாக வீழவில்லை. இது ரஷ்யாவைப் பொறுத்தவரை தோல்விதான். எனவே அடுத்த கட்டமாக மிக உக்கிரமான போர் முறைக்கு ரஷ்யா மாற வாய்ப்புள்ளது. இதற்காக தனது போர் தாக்குதல் முறையில் அது மாற்றம் கொண்டு வரலாம். அதாவது செசன்யாவிலும், சிரியாவிலும் கடைப்பிடித்த கொடூர தாக்குதல் முறையை ரஷ்யா கடைப்பிடிக்கலாம் என்று கருதப்படுகிறது.

கார்கிவ் நகரில் பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள் மீது ரஷ்யப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை இதற்கு உதாரணமாக காட்டுகின்றனர் ராணுவ நிபுணர்கள். முற்றுகையை விட உள்ளே புகுந்து கண்ணில் பட்டதையெல்லாம் தாக்கும் உத்தியை ரஷ்யா கையெடுக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அப்படி நடந்தால் பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழக்க நேரிடும்.

உக்ரைனுக்குள் நெடுந்தொலைவு ரஷ்யா ஊடுறுவியுள்ளது. ஆனாலும் இதுவரை பெரிய நகரம் எதையும் அது முழுமையாக கைப்பற்றவில்ல. அனைத்து முக்கிய நகரங்களையும் முற்றுகையிட்டுள்ளது, சுற்றி வளைத்துள்ளது. ஆனால் எந்த நகரையும் அது கைப்பற்ற முடியவில்லை. வடக்கிலும், கிழக்கிலும்தான் உக்ரைன் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் ரஷ்யாவுக்கு பெருமளவில் முன்னேற்றம் கிடைக்கவில்லை. மாறாக அதிக உயிர்ப்பலியை ரஷ்யா சந்தித்து வருகிறது.

கெர்சான் என்னாச்சு?.. உக்ரைனுக்குப் பெரும் சிக்கல்.. ரஷ்யாவுக்கு இது முக்கியம்!

தெற்கு உக்ரைனில்தான் ரஷ்யாவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கிரீமியாவிலிருந்து சென்ற ரஷ்யப் படையினருக்கு மெலிடோபோல், பெர்டியான்ஸ்க் ஆகிய நகரங்கள் கிடைத்துள்ளன. கெர்சானையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக மிக மோசமான தாக்குதலுக்கு ரஷ்யா தயராவதாக சொல்கிறார்கள். இந்தப் போரில் இனிமேல்தான் மிக மோசமான சம்பவங்கள் நடக்கப் போவதாக பாதுகாப்புத்துறை நிபுணர்களும் கணித்துள்ளனர். உக்ரைனை முழுமையாக நிர்மூலமாக்கவும் ரஷ்யா தயாராக இருக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையே, ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து அதிபர் புடின் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். உக்ரைனைப் பிடிக்க இவ்வளவு தாமதமா என்று அவர் கோபத்துடன் கேட்டதாகவும் அமெரிக்காவின் என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் விரக்தி அடைந்து வருவதாகவும், இதனால் “செசன்யா ஸ்டைல்” தாக்குதலுக்கு அவர் உத்தரவிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அது என்ன செசன்யா மாடல்?

சோவியத் யூனியனுடன் இணைந்திருந்த ஒரு பகுதிதான் செசன்யா – இங்குஷெட்டியா குடியரசு. சோவியத் யூனியன் பிளவு பட்டு பல நாடுகள் தனித் தனியாக பிரிந்து சென்றன. அப்படி பிரிந்து வந்தவைதான் செசன்யா – இங்குஷெட்டியா குடியரசும். இப்படி பிரிந்த பின்னர் செசன்யா மட்டும் தனி நாடாகப் பிரிந்தது. தன்னைத் தனி நாடாக அறிவிக்க முடிவு செய்தது. ஆனால் ரஷ்யா விடவில்லை. அதை தனது மாகாணமாக அறிவித்தது.

இதையடுத்து செசன்யாவில் புரட்சிப் படையினருக்கும், ரஷ்ய ராணுவத்துக்கும் இடையே மோதல் மூண்டது. 1994 முதல் 92 வரை நடந்த போரில் செசன்யாப் படையினர் ஓரளவு ஒடுக்கப்பட்டனர். ஆனால் பிரச்சினை தீரவில்லை. அந்தப் போரின்போது செசன்யா போராளிகளின் கை ஓங்கியிருந்தது. இதனால் ரஷ்யா பின்வாங்கியது. செசன்யா தன்னைத் தனி நாடாக பிரகடனம் செய்தது.

ரஷ்ய விமானப்படை ஆக்ஷனில் “மிஸ்ஸிங்”.. அடக்கி வாசிக்கும் புடின்.. வேற லெவல் ஸ்கெட்ச்!

அதன் பின்னர் ரஷ்யா சற்று அமைதி காத்தது. ஆனால் செசன்யா பிரிவினைவாதிகள் மாஸ்கோவில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆரம்பித்தனர். பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குண்டுகள் வெடித்து பலர் உயிரிழந்தனர். இதனால் கோபமடைந்த ரஷ்யா, 1999ம் ஆண்டு செசன்யாவை தாக்கி அழிக்க உத்தரவிட்டது. ஓராண்டு நீடித்த இந்தப் போரில் ரஷ்யா மிக மோசமான தாக்குதலை களம் இறக்கியது. செசன்யாவில் புகுந்து ரஷ்யப் படையினர் நடத்திய கொடூரமான தாக்குதலில் போராளிகள் ஒடுக்கப்பட்டனர், கூடவே பெருமளவிலான அப்பாவி பொதுமக்களும் கொன்று குவிக்கப்பட்டனர். செசன்யாவின் தலைநகரான குரோஸ்னி தரைமட்டமாக்கப்பட்டது. அத்தனை சொத்துக்களையும் அழித்து உருத்தெரியாமல் ஆக்கி விட்டது ரஷ்ய ராணுவம்.

பெருமளவில் முஸ்லீம்கள் வசிக்கும் செசன்யாவில் அதன் பிறகு போர் ஓய்ந்தது. அமைதி திரும்பியது. தற்போது ரஷ்யாவின் ஒரு அங்கமாக செசன்யா தொடர்கிறது. அங்கு பின்னர் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டது.

செசன்யா போரையும் புடின்தான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் பிரதமராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அதே புடின்தான், உக்ரைனிலும் போர் புரிந்து வருகிறார். இந்த முறை அவரது உத்திகளில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.

பற்றி எரிகிறது உக்ரைன்.. ரஷ்யா திடீர் ஆவேசம்.. 6வது நாள் போரில் பெரும் சேதம்!

இதேபோலத்தான் சிரியாவின் மிகப் பெரிய நகரமான அலப்போவிலும் ரஷ்யா ராணுவம் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டது. பாஷர் அல்அசாத் அரசைக் காப்பதற்காக அலப்போவுக்குள் ரஷ்ய ராணுவம் புகுந்து அதிரடியான தாக்குதலை மேற்கொண்டது. ரஷ்யா நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியால் போராளிகள் பின்வாங்கி ஓடினர். மிகப் பெரிய உயிர்ச்சேதமும் நடந்தது. அலப்போ, பாஷர் அல் அசாத் அரசின் வசம் வந்தது.

செசன்யா, சிரியா ஆகிய இரு போர்களிலும் ரஷ்யாவே வென்றது. இதே உத்தியை இப்போது உக்ரைனிலும் பயன்படுத்தி அதை அழித்து விட்டு கைப்பற்ற ரஷ்யா முனையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அப்படி செய்ய ரஷ்யா முடிவெடுத்து விட்டால் மிகப் பெரிய உயிர்ச்சேதத்தை உக்ரைன் சந்திக்கலாம். இதுதான் உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கி வருகிறது.

செசன்யா போரின்போது போராளிகள் படைக்கு தலைமை தாங்கியவர் ரம்ஸான் கேடிரோவ். தற்போது அவர் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யாவின் ஊடுறுவலை மிகக் கடுமையாக கண்டிக்க வேண்டும். ஆனால் எல்லோரும் அமைதி காக்கிறார்கள் என்று தெரியவில்லை. உக்ரைன் மக்களுக்கு எதிராக மிக மோசமான தாக்குதலில் ரஷ்யா இறங்கியுள்ளது. இதை முழு அளவில் எதிர்க்க வேண்டும். உக்ரைன் முழுவதும் திரண்டு வந்து ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என்றார் அவர்.

ரஷ்யாவின் திட்டம் என்ன.. புடின் என்ன செய்யப் போகிறார்.. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது திகில் நிறைந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.