இலங்கையில் முழுமையாக முடங்கும் ஆபத்தில் பேருந்து போக்குவரத்து! கடுமையான எச்சரிக்கை



நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் ஆபத்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

சிலர், தாம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக அதிலும் குறிப்பாக டீசலை பெறுவதற்காக ஒரு சில மணித்தியாலங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கும் அதேவேளை இன்னும் சில சாரதிகள், தாம் 24 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் எரிபொருள் முறையாக கிடைக்காமையால் 70 வீதமான தனியார் பேருந்துகள் போக்குவரத்திலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இனியும் டீசல் இல்லையெனில் இன்று அல்லது நாளை 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அங்ஞன பிரியஞ்சித் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் பெருமளவான மக்கள் பேருந்துகளை நம்பியே தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள் உள்ளிட்ட பலர் பேருந்துகளில் பயணம் செய்தே தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையானது தனியார் பேருந்து போக்குவரத்தை முழுமையாக ஸ்தம்பிக்கச் செய்யும் அபாயம் காணப்படுவதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.