உக்ரைனில் பிணைகைதிகளாக இந்திய மாணவர்கள்: மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்!

உக்ரைன்
மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். சுமார் 20,000 இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ஆப்ரேஷன் கங்கா
என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியர்களை மீட்கும் பணிகளை பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட்டு வருகிறார். இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். அதேசமயம், உக்ரைனில் நடைபெற்று வரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் என தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்படு வருவதாக கூறி உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் மீது எல்லையில் உக்ரைன் ராணுவத்தினர் அராஜகமாக நடந்து வருவதாக சில வீடியோக்கள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக, உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உக்ரைனில் பிணைக் கைதிகளாக இந்திய மாணவர்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மாணவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. கார்கிவ் மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து நாட்டின் மேற்குப் பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வதில் உக்ரைன் அதிகாரிகளின் ஆதரவை நாங்கள் கோரியுள்ளோம்.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாணவர்களோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, பல மாணவர்கள் நேற்று கார்கிவ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.” என்று விளக்கமளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.