புதுடில்லி: உக்ரைனில், இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு, மாணவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் வரவில்லை. கார்கிவ் மற்றும் அதன் அண்டை நகரங்களில் இருந்து உக்ரைனின் மேற்கு பகுதிக்கு இந்தியர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்யும்படி அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அந்நாட்டு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஏராளமான இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.
மாணவர்களை மீட்பதில் ரஷ்யா, ருமேனியா, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவோகியா மற்றும் மோல்டோவா நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கடந்த சில நாட்களில் ஏராளமான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனை சாத்தியமாக்கிய உக்ரைன் அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். இந்தியர்களை விமானங்களில் அழைத்து வரும் வரை, அவர்களுக்கு உதவி செய்த அண்டை நாடுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக ரஷ்ய ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், கார்கிவ் நகரில் இருந்து வெளியே விரும்பும் இந்திய மாணவர்களை உக்ரைன் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்துள்ளனர். அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரஷ்ய ராணுவம் தயாராக உள்ளது. மேலும், அவர்களை ரஷ்யாவில் இருந்து எங்களது விமானம் அல்லது இந்திய அரசு ஏற்பாடு செய்த விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement