உக்ரைனுடனான போரில் படையினர் உயிரிழப்பு – முதல் முறையாக ஒப்புக்கொண்ட ரஷியா

மாஸ்கோ,
உக்ரைன் மீது 8-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனுடனான போரில் தங்கள் தரப்பில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை ரஷியா முதல் முறையாக வெளியிட்டுள்ளது. 
ரஷியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனுடனான போரில் ரஷிய வீரர்கள் 498 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போரில் 1,597 வீரர்கள் காயமடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
போரில் உக்ரைன் வீரர்கள் 2 ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷியா தெரிவித்துள்ளது.
அதேவேளை, ரஷியா நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், ரஷியாவுடனான மோதலில் தங்கள் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை உக்ரைன் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.