உக்ரைன்-ரஷியா இடையே இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை

பெலாரஸ்:
உக்ரைன்-  ரஷியா இடையேயான போர்  நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. 
போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.பொதுச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ரஷ்யாவும், உக்ரைனும் மத்தியஸ்தம் மற்றும் அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,  போரை நிறுத்துவது தொடர்பாக தங்கள் நாடு மீண்டும் பேச்சு வார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாக உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். 
போலந்தின் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் வியாழன்(இன்று) வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதின் உதவியாளரும் ரஷ்யாவின் தூதுக்குழுவின் தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறினார். 
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக போரை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.