கெய்ரோ: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் ஈஷா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
எகிப்தின் கெய்ரோவில்உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 60 நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் ஈஷா சிங் பங்கேற்றார். ஜூனியர் பிரிவில் பல்வேறு பதக்கங்கள் வென்ற இவர், முதன் முறையாக ‘சீனியர்’ அரங்கில் களமிறங்கினார்.
இதன் பைனலுக்கு முன்னேறிய இவர், நடப்பு உலக சாம்பியன், உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனை, கிரீசின் அனா கொரகாகியை சந்தித்தார். இதில் 4-16 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஈஷா, வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில் வென்ற முதல் பதக்கம் இது. பல்கேரியாவின் கோஸ்டாடினோவாவுக்கு வெண்கலம் கிடைத்தது.
ஆண்கள் ‘ஏர் ரைபிள்’ அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ருத்ரன்காஷ், திவ்யான்ஷ் சிங், ஸ்ரீன்ஜாய் அடங்கிய அணி 624.1 புள்ளி பெற்று வெண்கலப் பதக்கத்தை இழந்தது. ஸ்ரேயா, ஆயுஷி, ராஜ்ஸ்ரீ இடம் பெற்ற இந்திய பெண்கள் அணி, 7வது இடம் பிடித்து ஏமாற்றியது.இதுவரை இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி என 2 பதக்கங்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
Advertisement