கொடூர நாட்கள் காத்திருக்கிறது… மொத்தமாக முடிப்போம்: விளாடிமிர் புடின் ஆவேசம்


உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவருவதாகவும், இன்னும் கொடூரமான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 7வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பிலும் உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது.
உக்ரேனிய அப்பாவி பொதுமக்கள் ஆயிரங்கள் ரஷ்யாவின் கண்மூடித்தனமான உக்கிர தாக்குதல்களுக்கு பலியாகியுள்ளனர்.

உக்ரைனில் ஒவ்வொரு மாவட்டமாக சிதைத்து ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. இது ஒரு போர் அல்ல எனவும், ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டே உக்ரைன் நகரங்களை சிதைத்து முன்னேறுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மிகக் கொடூரமான தாக்குதல் இனிமேல் தான் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு தலைவர்களும் சுமார் ஒன்றரை மணி நேரம் உக்ரைன் விவகாரம் தொடர்பில் காரசாரமாக விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனை மொத்தமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே இந்த அதிரடி தாக்குதலின் நோக்கமாக இருக்கும் எனவும்,

இனிவரும் நாட்கள் கொடூரமாக இருக்கும் எனவும், தாக்குதலைத் தொடர்வதற்கான தனது மிகப்பெரிய உறுதியை ஜனாதிபதி புடின் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய துருப்புகள் தங்களின் திட்டப்படியே தாக்குதலை முன்னெடுத்து வருவதாகவும், உக்ரைன் ராணுவம் சரணடைய மறுக்கும் ஒவ்வொரு நாளும் கொடூரமான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், உக்ரைன் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர தம்மால் இயன்ற அனைத்து நகர்வுகளையும் முன்னெடுக்க இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேசுகையில், புடின் மீதான விரோதப் போக்கை பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் குற்றம் சாட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சர்வதேச கடமைகளை மறந்து, தனியொருவராக விளாடிமிர் புடின் இந்த போருக்கு துணிந்துள்ளார் என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான போர் அல்ல இதுவென்றும், நேட்டோ தளங்கள் எதுவும் உக்ரைனில் இதுவரை அமைக்கப்படவில்லை எனவும் மேக்ரான் விளக்கமளித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.