அடுத்த அதிரடி பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார் சூர்யா. பாண்டிராஜின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸை நோக்கி பறக்கிறது. இதற்கிடையே பாலாவின் படத்திற்காக சூர்யா தனது ஹோம் ஒர்க்கைத் தொடங்கிவிட்டார்.
பாலா- சூர்யா கூட்டணியை மீண்டும் தொடங்கி வைத்தவர் சிவகுமார். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மாயாவி’ (தயாரிப்பு) படங்களின் மூலம் சூர்யாவின் நடிப்புத்திறமையை மெருக்கேத்தியதில் பாலாவுக்கு பெரும்பங்கு உண்டு. மீண்டும் பாலாவுடன் படம் என முடிவானதும், ”என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர், ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர், இருபது ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…” என அகமகிழ்ந்து சொன்னார் சூர்யா.
சூர்யாவின் தேதிகள் முடிவானதும், ஸ்கிர்ப்ட் வேலைகளில் மும்முரமாக இறங்கினார் பாலா. இது ஒரு கிராமியக் கதை என்றும், படத்தில் சூர்யா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் சொல்கிறார்கள். அதாவது காது கேட்காத வாய்பேசமுடியாத பாத்திரத்தில் நடிக்கிறார் சூர்யா. ‘பேரழகன்’ படத்திற்கு பிறகு மீண்டும் வெயிட்டான ரோல். அதுவும் பாலாவின் படம் என்பதால், கதாபாத்திரத்திற்கான ஹோம் ஒர்க்குகளில் இறங்கிவிட்டார். இந்நேரத்தில் இன்னொரு விஷயமும் நினைவிற்கு வருகிறது. ‘மொழி’யில் ஜோதிகா நடித்த கதாபாத்திரமும் இதே போன்ற ஒரு கதாபாத்திரம்தான்
சித்திரையில் மதுரையில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுஅ திட்டமிட்டிருக்கின்றனர். மதுரையில் இப்போதே செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதகாவும் சொல்கின்றனர்.