கரோனா 3-வது அலை மரணம்; 92% பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஐசிஎம்ஆர் தகவல்

புதுடெல்லி: கரோனா 3-வது அலையில் உயிரிழந்தவர்களில் ஏறக்குறைய 92 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே என ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. மே, ஜூன் மாதங்களில் இதன் தாக்கம் அதிகரித்து நவம்பர் மாதத்தில் குறையத் தொடங்கியது. ஆனாலும் இந்தாண்டு பிப்ரவரியில் கரோனா 2-வது அலை பரவத் தொடங்கி அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் நாட்டில் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத நிலவரபப்படி 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் 2-வது அலையின் பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் 3-வது அலை தொடங்கியது. இதில் பாதிப்பு அதிகஅளவில் இருந்தபோதிலும் மரணம் குறைவாகவே இருந்தது. பரவிய வேகத்தில் 3-வது அலையும் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில் கரோனா 3-வது அலையில் நேரிட்ட இறப்புகளில் கிட்டத்தட்ட 92% தடுப்பூசி போடப்படாதவர்களே காரணம் என்று ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறியதாவது:

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், 10.2 சதவீதம் பேர் மட்டுமே கோவிட்-19 -க்கு பலியாகியுள்ளனர். முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு இறந்தவர்களில் 91 சதவீதம் பேர் இணை நோயுற்றவர்களாக இருந்துள்ளனர்.

இறந்தவர்களில் 21.8 சதவீதம் பேர் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்கள். அவர்களில் 83 சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியவர்கள் ஆவர்.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட கோவிட் -19 தொற்று எண்ணிக்கையில் பல நாடுகள் இன்னும் தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் கோவிட் மேலாண்மைக்கு தடுப்பூசி உதவியுள்ளது. ஒமைக்ரான் மாறுபாட்டால் ஏற்பட்ட 3- வது அலையில் இறப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளது.

இரண்டாவது அலையில் (மார்ச் 21 முதல் ஜூலை 14, 2021 வரை) 1.29 சதவீதமாக இருந்த இறப்பு விகித அளவு 3-வது அலையில் (ஜனவரி 4 முதல் பிப்ரவரி 14, 2022 வரை) 0.35 சதவீதம் ஆகக் குறைந்தது. இதற்கு தடுப்பூசி மிக முக்கிய பங்காற்றியுள்ளது.

2021 ஆம் ஆண்டின் இரண்டாவது அலையின்போது தகுதியுள்ளவர்களில் 10.1 சதவீதம் பேர் மட்டுமே பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டு இருந்தனர். 2.1 சதவீதம் பேர் இரண்டு டோஸ்களுடன் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் ஆவர். மறுபுறம் மூன்றாவது அலையின்போது 90.83% பெரியவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. 65.4 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

நாம் கரோனா குறைந்த காலக் கட்டத்தில் இருக்கிறோம். அதனால்தான் பள்ளிகள் மற்றும் வணிகங்களையும் திறந்து விட்டுள்ளோம். எனினும் கண்காணிப்பும் தொடர்கிறது. 3-வது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து விட்டபோதிலும் முககவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் அவசியமான ஒன்றாகும்.

இரண்டாவது அலை 117 நாட்கள் நீடித்தது, அதாவது கடந்த ஆண்டு மார்ச் 21 முதல் கடந்த ஆண்டு ஜூலை 14 வரை நாட்டில் மொத்தம் 1.94 கோடி தொற்று எண்ணிக்கையும், 2.52 லட்சம் இறப்புகளும் ஏற்பட்டன. அப்போதைய தொற்று பரவல் விகிதம் 1.29 சதவீதம் ஆக இருந்தது.

41 நாட்கள் நீடித்த மூன்றாவது அலையின் போது கடந்த ஜனவரி 4 முதல் பிப்ரவரி 14 வரை இந்தியாவில் 77.42 லட்சம் தொற்று மற்றும் 27,118 இறப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று பரவல் விகிதம் 0.35 சதவீதம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இதுகுறித்து கூறுகையில், “சுகாதாரப் பாதுகாப்பு, முன்களப் பணியளர்களின் இடைவிடாத முயற்சி, தடுப்பூசி ஆகியவற்றால் 3- அலையில் பாதிப்பை கணிசமாக நாம் குறைத்துள்ளோம்’’ எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.